our inspiration

Monday, May 28, 2012

துரித உணவைத் தவிர்ப்போம்

ஆர்.எஸ். நாராயணன்
First Published : 28 May 2012 02:21:38 AM IST Dinamani



உணவே மருந்து; மருந்தே உணவு' என்று வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு நாகரிகத்தின் காரணமாக, பாரம்பரியம் இழந்து அவர்கள் உண்ணும் உணவே விஷமாகிவிட்டது.


இயற்கை விவசாயமும் மெல்ல மெல்ல உயர்ந்தும் வருகிறது. அவ்வாறு இயற்கை விவசாய உணவை வாங்க இயலாதவர்கள், கடையில் வாங்கும் ரசாயனத்தில் விளைந்த காய்கறிகள் - பழங்கள் - தானியங்களை 8 மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து அத்தண்ணீரை வடித்துவிடலாம். சற்று விஷம் குறைய வாய்ப்புண்டு.


அதற்காக சமைக்கும் உணவே வேண்டாம் என்று முடிவு செய்யக்கூடாது. விதம் விதமான துரித உணவுகள் அங்காடிகளில் குவிந்தவண்ணம் உள்ளன. குழந்தைகள் வாங்குவதற்காக பாலிவுட், கோலிவுட் நடிகர் நடிகைகளும், கிரிக்கெட் வீரர்களும் அவற்றை உண்பதாக காட்டுவார்கள். இவற்றை "ஜங்க் ஃபுட்' என்பார்கள். அதாவது கெட்ட உணவு.

இந்திய ஊட்ட உணவு நிபுணர்கள் கெட்ட உணவு என்பதை ஏற்க மாட்டார்கள். "தவறான டயட்' அதாவது ""சமநிலை இழந்த ஊட்ட உணவின் கூட்டல்'' என்பார்கள். கெட்ட உணவு விளம்பரத்தில் ஊட்ட உணவு நிபுணர்களும் பங்கேற்பது உண்டு.


சமையல் இல்லாமல் அதாவது சமையலறைக்குச் செல்லாமல் பல மாதங்களுக்கு முன்பே சமைக்கப்பட்டதும் கெடாமல் இருக்க ரசாயனங்களும் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுதான் துரித உணவு. இவற்றிலும் பூச்சி மருந்து விஷம் இருக்க வாய்ப்புண்டு. பூச்சி மருந்து விஷத்திற்கு மேல் வேறு ஆபத்துகளும் உண்டு.


என்னென்ன துரித உணவுகள் நமக்குக் கிடைக்கின்றன? அவற்றில் உள்ள ஊட்டங்களின் அளவு என்ன? உணவைக் கெடாமல் பாதுகாக்கச் சேர்க்கப்படும் ரசாயனங்களில் நன்மை உண்டா? எப்படி சமச்சீரான உணவு பாதிக்கப்படுகிறது? என்று சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்தித்து துரித உணவிலிருந்து விடுதலை பெறுவது நன்மை பயக்கும்.


துரித உணவில் அதிகமான கலோரி உண்டு. ஊட்டம் இல்லாததால் நோய் ஏற்படும். முக்கியமாகக் கூடுதல் கொழுப்பு உடலில் சேர்ந்து குண்டுக்குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. உடலில் தேவைக்குமேல் சதை ஏறுவதால் சர்க்கரை நோய், உயர்ந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மனித ஆயுள் குறைகிறது.



100 வயது வாழ வேண்டிய மனிதன் 50, 60 வயதுகளில் இறக்க நேரிடும். ஆகவே மேலைநாடுகளில் துரித உணவு விளம்பரங்களுக்குத் தடை உண்டு. சில நாடுகளில் துரித உணவுக்குக் கொழுப்பு வரி போடுகிறார்கள். விளம்பரங்களால் தூண்டப்படும் குழந்தைகள் அளவுக்கு மீறி தனியார் நிறுவன உருளை வறுவல்களைத் தின்று பருமன் நோய் வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். குறைந்த எடை குழந்தைகளைவிடக் கூடுதல் எடை குழந்தைகளின் ஆரோக்கிய நிலை ஆபத்தில் முடியலாம்.


உணவில் இரண்டு வகையான கொழுப்புகள் உண்டு. ஒன்று சாதாரணக் கொழுப்பு. நெய், சமையல் எண்ணெய்களில் உண்டு.


மற்றொன்று டிரான்ஸ்ஃபேட் என்று கூறப்படும் கெட்டகொழுப்பு. இது அடர் கொழுப்பும் அல்ல. டிரான்ஸ் கொழுப்பு, கரையாத கொழுப்பு என்றும் கூறலாம். நெய், எண்ணெய்களை அடர் கொழுப்பு என்பர். கரையாத டிரான்ஸ் கொழுப்பு அடர் கொழுப்பைவிட நான்கு மடங்கு கெடுதல். கரையாத கொழுப்பு வனஸ்பதியில் அதிகம்.


எல்லா சமையல் எண்ணெய்களையும் ஹைட்ரஜனேஷன் செய்து வனஸ்பதி அல்லது டால்டா செய்யப்படுகிறது. எல்லா வகையான துரித உணவுகளிலும், கேக்குகளிலும் வனஸ்பதி பயனாகிறது. அமெரிக்க ஐரோப்பிய டால்டாவில் 2 சதவிகித டிரான்ஸ் கொழுப்பு அனுமதிக்கப்படுகிறது.


ஐரோப்பிய நாடுகளில் தேங்காய் எண்ணெய் டால்டாவுக்குப் பயனாவதால் டிரான்ஸ் கொழுப்பு குறைவு. தேங்காய் எண்ணெயில் அடர் கொழுப்பு உண்டு. ஆனால், கரையாத கொழுப்பு இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் டால்டாக்களில் 12 முதல் 24 சதவிகிதம் கரையாத டிரான்ஸ் கொழுப்பு உள்ளது.


சில டால்டா நிறுவனங்களின் தயாரிப்புகளில் டிரான்ஸ் கொழுப்பு அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் மத்திய அரசால் அனுமதிக்கப்படுவது அடிப்படைத் தவறு. டிரான்ஸ் கொழுப்பு 2 கிராம், அடர் கொழுப்பு 20 கிராம் அளவுக்குமேல் மனிதன் உண்ணும்போது ரத்தக்குழாய் தடிக்கும். ரத்த அழுத்தம் உயரும். இதயம் மட்டுமல்ல, சிறுநீரகம் பழுதுறலாம். நீரிழிவு வரும். ஊளைச்சதையுள்ள குண்டுக்குழந்தை, குண்டுப் பெண்மணி நோயுடன் வாழ்ந்து குறைந்த ஆயுளில் இறந்துவிடுவார்கள்.


ஒரு மனிதன் நலமுடன் வாழ சராசரியாக 2,200 கலோரி உணவு போதும். இந்தக் கலோரி 300 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் உப்பு, 20 கிராம் கொழுப்பு, 2 கிராம் டிரான்ஸ் கொழுப்பு ஆகியவற்றில் கிடைத்துவிடும். 300 கிராம் மாவுச்சத்து (கார்போ ஹைட்ரேட்) என்பதில் சர்க்கரையும் அடங்கும். தானியங்கள், பருப்பு வகைகளில் புரதச்சத்து உண்டு. வைட்டமின் சத்துக்காக உண்ணும் காய்கறி - பழங்களில் தேவையான நார்ச்சத்தும் கிட்டும்.



நாம் உண்ணும் பல உணவுகளில் மாவுச்சத்துடன் புரதச்சத்தும் உண்டு. ஆனால், துரித உணவுகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் எதுவுமே இல்லை என்பதுடன், அனுமதிக்கப்படும் அளவுக்குமேல் உப்பும், கரையாத கொழுப்பும் உள்ளதால் மனித ஆயுள் குறைகிறது. ஆயுள் குறைவது மட்டுமல்ல, தினமும் மாத்திரைகள், ஊசிகள் என்று மனித உடல் மருந்துக்கு அடிமையாவதையும் கவனிக்கலாம்.


அதிகபட்சமாக அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் துரித உணவுகளிலும் குறைந்தபட்சமாக அவரவர் சமைக்கும் உணவுகளிலும் கெடாமல் இருக்கவும் நிறத்திற்காகவும் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்களினாலும் நோய்கள் ஏற்படும். சாதாரணமாக சமைத்த உணவு 6, 7 மணி நேரத்திற்கு மேல் தாங்காது. பூஞ்சைக்காளான் பிடிக்கும். புளிக்கப் புளிக்கக் கெட்ட வாடை வரும். மோர், சாத்தூத்தம் (பழைய சோற்றில் நீர் ஊற்றி வைக்கப்படும் புளித்த நீராகாரம்) நீங்கலாக மற்ற உணவு கெட்டுவிடும். நீர் ஊற்றி வைக்கும் போது தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் காரணமாக ஈஸ்ட், லேக்டோ பாசிலஸ் போன்ற நுண்ணுயிரிகள் பெருகி உயிர் வாழ்வதால் மோர், நீராகாரம் உடலுக்கு நல்லது. மற்றவை அப்படி அல்ல. முற்காலத்தில் சர்க்கரைப்பாகு, தேன், உப்பு, கிராம்பு, எலுமிச்சை போன்றவை உணவு கெடாமல் இருக்கப் பயனாயிற்று. இப்போது ஃபிரிட்ஜ். மின்சாரம் நின்றுவிட்டால்? ஃபிரிட்ஜ் உணவும் பாதுகாப்பானது இல்லை.


மனிதர்கள் உண்ணும் ஜாம், ஜெல்லி, சீஸ், ஊறுகாய் போன்ற துரித உணவுகளில் பென்சோட் என்ற நச்சு சேர்க்கப்படுகிறது. பென்சீன் என்ற ரசாயனம் நிலக்கரி வாயுவிலிருந்து உருவாகும் எரிபொருள். பூச்சி மருந்துகளிலும் பென்சோட் உண்டு. அடைக்கப்பட்டு விற்கப்படும் இறைச்சிகளில் நைட்ரேட் சேர்க்கப்படுகிறது. ரொட்டி, பன், கேக் போன்றவற்றில் சோடியம் பென்சோட் சேர்க்கப்படுகிறது. வெள்ளை நிறம் பெற சல்ஃபைட் சேர்க்கப்படுகிறது. சிவப்பு / மஞ்சள் / பிங்க் நிறம் பெற அலுமினியம் குரோமைட் என்ற விஷப்பொருள் சேர்க்கப்படுகிறது. கேசரி பவுடர் என்ற பெயரில் குரோமைட் விற்கப்படுவதால் அதை அல்வாவிலும் கேசரியிலும் பயன்படுத்துவார்கள். விஷயமறியாத தாய்மார்கள் கேசரி பவுடரை வாங்கி சிவப்பு நிறத்துக்குப் பயன்படுத்துவது உண்டு.

தனியார் நிறுவன உருளைக்கிழங்கு வறுவல்களில் புட்டிலேட்டட் ஹைட்ராக்சினேட் சேர்க்கப்படுகிறது. வயிற்றில் கட்டி வரும். சோடியம் பைகார்பனேட் என்ற சமையல் சோடா சேர்க்கப்படாத பொருளே இல்லை. இதுவும் உப்பைப்போல் அளவுக்கு அதிகமானால் ரத்த அழுத்த நோய்க்கு வித்தாகும். சல்ஃபைட் விஷத்தால் ஒவ்வாமை, மூச்சுத்திணறல், சளி ஏற்படும்.


இது ஓர் அவசர உலகம். நல்லுணவை நல்ல விதமாகச் சமைக்கக்கூடிய பாட்டிமார்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டோம். ஜங்க் ஃபுட் - அதாவது கெட்ட உணவை விலைகொடுத்து வாங்கி நோயுறுகிறோம். மனிதர்களே நன்கு யோசியுங்கள். அந்தக் காலத்தில் நெல்லூர்த்த மாவு, சத்து மாவு என்று பாட்டிமார்கள் திடீர் உணவு செய்வார்களே.


அவல் உள்ளது, பழங்கள் உள்ளன, இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி, தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சப்பாத்தி என்று எதுவும் வீட்டில் செய்து நீங்களே கொண்டு வரவேண்டும். துரித உணவைவிட சமையலறை உணவுதான் நல்லது.

Sunday, May 20, 2012

ஆயுர்வேத மருத்துவத்தில் பஞ்சகவ்யத்தின் பலாபலன்கள்


பசுவின் பால், தயிர், நெய், பசுவின் சாணம், கோமூத்ரம் எனப்படும் பசுவின் சிறுநீர் ஆகியவை சேர்ந்தது பஞ்சகவ்யம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த ஐந்து திரவங்களும் எந்த விகிதத்தில் கலக்கப்பட வேண்டும்? ஆயுர்வேத மருத்துவத்தில் பஞ்சகவ்யத்தின் பலாபலன்கள் விளக்கப்பட்டுள்ளனவா? தினந்தோறும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் பஞ்சகவ்யம் உட்கொண்டால் பெறும் நன்மைகள் எவை?



 "பஞ்ச' என்றால் ஐந்து. "கவ்யம்' என்றால் பசு மாட்டிலிருந்து கிடைக்கக் கூடிய பால், தயிர், நெய், சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றின் கலவை. அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூலில் இந்த பஞ்சகவ்யம் பற்றிய விபரம் உத்தர ஸ்தானத்தில் வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்தையும் நெய்யுடன் சேர்த்து பக்குவம் செய்து சாப்பிட்டோமேயானால் வலிப்பு, ஜுரம், பைத்தியம், காமாலை போன்ற உபாதைகள் நீங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நெய் மருந்தாகக் கிடைக்கிறது.

 ஒவ்வொன்றையும் சம அளவு சேர்க்க வேண்டும் என்று சரக ஸம்ஹிதையில் கூறப்படுகிறது. ஆனால் பசுநீர் 1 பங்கு, பசும்சாணம் 1 1/2 பங்கு, பால் 8 மடங்கு, நெய் 4 பங்கு, தயிர் 5 பங்கு என்ற விகிதத்தில் சேர்ப்பது சம்பிரதாயமாகும் (ஸித்த யோகம்).
 மகாபஞ்சகவ்யகிருதம் என்ற பெயரிலும் ஒரு நெய் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தசமூலம், திரிபலை, மஞ்சள், மரமஞ்சள், வெட்பாலைப்பட்டை, ஏழிலம்பாலை, நாயுருவி, அவுரி, கடுகரோஹிணீ, கொன்றை, புஷ்கரமூலம், பேயத்தி வேர், காஞ்சொறி இவற்றை வகைக்கு 2 பலம் எடுத்து 16 பிரஸ்த நீரிலிட்டுக் காய்ச்சி நாலில் ஒன்றாகுமாறு குறுக்கி அதில் சிறுதேக்கு, வட்டத் திருப்பி, துவரை, சிவதை, நாகதந்தீ, த்ரிகடுகு, வாசனைப் புல், பெருங்குரும்பை, ஓமம், நிலவேம்பு, யானைத் திப்பிலி, நன்னாரி, பெருநன்னாரி, மல்லிகை (காட்டாத்தி என இந்து முனிவர். காட்டு மல்லிகை எனச் சிலரும், மருதோன்றி எனச் சிலரும் கூறுவர்), கொடிவேலி, நொச்சி ஆகியவற்றை வகைக்கு 1/4 பலம் எடுத்து கல்கமாக்கி கலப்பதுடன் முன் கூறப்பட்ட பஞ்சகவ்ய திரவப் பொருட்கள் நான்கையும் சேர்த்து ஒரு பிரஸ்தம் நெய் பக்குவம் செய்து கொள்ள வேண்டும். இது மகாபஞ்ச கவ்யம் எனப்படும். இது விசேஷமாக ஜுரம், வலிப்பு, மருகாதரம், பவுத்திரம், வீக்கம், மூலம், காமாலை, பாண்டு, குன்மம், இருமல், கிரஹபீடை ஆகிவவற்றைப் போக்கும்.

 வலிப்பு நோய் உள்ளவருக்கு இந்த நெய் மருந்தை அப்படியே கொடுத்துவிட முடியாது. வாயுவால் உண்டான வலிப்பை, பஸ்தி எனும் எனிமா முறையாலும், பித்தத்தால் உண்டான வலிப்பை, பேதி மருந்தாலும், கபத்தால் உண்டான வலிப்பை, வாந்தி சிகிச்சையாலும் குடல் சுத்தி முறைகளைச் செய்த பிறகு, கஞ்சி முதலியவற்றால் உடலைத் தேற்றி, அதன் பிறகே வலிப்பு நோயை அடக்குவதற்கும், நீக்குவதற்கும் பஞ்சகவ்யகிருதம் எனும் நெய் மருந்தைச் சாப்பிட வேண்டும்.

 மற்ற மருத்துவமுறைகளால் கண்டறியப்படாத மனோவஹஸ்தரோதஸ், அதாவது மனதின் திட்டங்களையும் செயல்களையும் ஏந்திச் செல்லும் குழாய்களைப் பற்றிய விபரங்களை ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறது. தினமும் ஓரிரு ஸ்பூன் பஞ்சகவ்ய நெய் மருந்தைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், புத்தியும் மனமும் கலக்கமடையாமல் தெளிவான சிந்தனையும், சிந்தனைக்கேற்ற செயல்பாடுகளும் ஏற்படும். கவலை, வருத்தம், பயம், காமம், குரோதம் முதலியவற்றால் மனம் கலக்கப்பட்ட நிலையில், கோபமடைந்த மனம், உடல் ஆகியவற்றின் ரஜோகுண, தமோகுண வாயு தோஷங்களால் இருதயம் நிரம்பப் பெற்று, ஸத்வ குணம் குலைந்து, உணர்வை எடுத்துச் செல்லும் குழாய்களிலும் தோஷங்கள் பரவிய நிலையில் தமோ குணத்தை அடைந்தவராகி அறிவுகுன்றி அருவருக்கத்தக்க சேஷ்டைகளைப் புரிபவர்களுக்கு, இந்த பஞ்சகவ்ய மஹாபஞ்சகவ்ய நெய் மருந்தானது ஒரு வரப் பிரசாதமாக அமையும். அந்த அளவிற்கு மனதில் அமைதியைத் தோற்றுவிக்கும்.
 குடல், இதயப் பகுதி, உட்புறக் குழாய்கள், மூச்சுப்பாதை போன்ற முக்கியமான பகுதிகளில் சேரக் கூடிய கிருமித் தொற்று, அடைப்பு, சுருக்கம், தளர்ந்தநிலை, செயல்திறன் குன்றுதல் போன்ற உபாதைகளை பஞ்சகவ்யக்கிருதத்தின் தொடர்ச்சியான உட்புற வரவால் நீங்கிவிடக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் மனதைச் சார்ந்த உபாதைகள் பெருகி வருகின்றன. அவற்றுக்கு பஞ்சகவ்ய - மஹா பஞ்சகவ்ய நெய் மருந்துகள் ஒரு சிறப்பான தீர்வைத் தரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

நன்றி: தினமணி