our inspiration

Tuesday, July 19, 2011

மாசானபு புகோகாவின் சிந்தனைத் துளிகள்






1. வனத்தில் முளைக்கும் விதைகள்,, உழுத நிலம் கேட்பதில்லை

2. மழை மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது.


3. இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும்.


4. இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை.அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும் வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்

5. சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசு படுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன.


6. நிலம் , நீர் , மரம் , பூச்சி -- இவைகளை அப்படியே விட்டுவிட்டு விளைச்சல் பெரும் வேளாண்மைதான் இயற்கை வேளாண்மை

7. உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் அனுபவிக்கமுடியும்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்


எம். குப்புசாமி (Dinamani /1-6-2011)First Published : 01 Jun 2011 01:51:41 AM ஐ‌எஸ்‌டி

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இன்றைய எத்தனால் உற்பத்தி 4,80,000 டன்தான். 2.5 கோடி டன் எங்கே? 4.8 லட்சம் டன் எங்கே? உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 ஆகவும், டீசல் விலை ரூ. 70 ஆகவும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் செயலிழந்து நிற்கின்றனர்.

எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. 1984-ல் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க என்னென்ன இடையூறுகள் உண்டோ அவ்வளவையும் செய்து திட்டம் வராமலேயே செய்துவிட்டனர்.

2007-ல் திட்டத்தின் மகிமையை உணர்ந்து திட்டத்துக்கான அனுமதியை இந்தக் குழுமத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வழங்கியது. எங்கு நிதீஷ் குமாருக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று கருதித் திட்டத்தை நிறைவேற்றாத வண்ணம் மத்திய அரசு தலையிட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது. இவ்வாறு இருப்பின் எப்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலும்?

பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து கொள்ளலாம். எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.

24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம். இதற்கு என்ஜினில் மாற்றங்கள் செய்ய வேண்டும். எத்தனால் மட்டுமே பயன்படுத்தலாம். இதற்கான என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. போர்டு குழுமம் பிரேசிலில் இந்த என்ஜின்களை உற்பத்தி செய்கிறது. எனவே, சென்னையிலும் போர்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்ய இயலும்.

இந்திய அரசு எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ. 27 என்று நிர்ணயித்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,500 கொடுக்க வேண்டுமெனில் எத்தனால் விலையைக் குறைந்தபட்சம் ரூ. 32 ஆக நிர்ணயிக்க வேண்டும். பங்கில் எத்தனால் விலை ரூ. 32; மத்திய அரசின் வரி 16% - ரூ. 5.12; பங்குக்குக் கமிஷன் 5% - ரூ. 1.85; போக்குவரத்துச் செலவு 50 பைசா மற்றும் இதர செலவுகள் 53 பைசா ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் விலை ரூ. 40.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மக்காச்சோளம் மட்டுமன்றி "ப்ரையாரிக்ராஸ்' என்ற புல்லையும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 5.12 வரியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி இந்தியாவில் குறைக்க முடியும்?

எத்தனால் கலப்பதால் மாசு 50% கட்டுப்படுத்தப்படும். மத்திய அரசின் வரியை நீக்கிவிட்டால் எத்தனால் ஒரு லிட்டர் ரூ. 35-க்குக் கிடைக்கும். மக்கள் ரூ. 70-க்கு பெட்ரோல் போடுவதைவிட்டு ரூ. 35-க்கு எரிபொருளைப் பயன்படுத்தி மகிழ்வர். 24% எத்தனாலைக் கலக்கும்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.75 குறையும். 85% எத்தனாலைக் கலக்கும்பொழுது ஒரு லிட்டருக்கு ரூ. 30 குறைந்து ரூ. 40-க்கு வாகன எரிபொருள் கிடைக்கும். இதைச் செய்ய பிரேசிலைப்போல் ஒரு குடியரசுத் தலைவர் இந்தியாவுக்குத் தேவை.

எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும்.

உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை - 100 கிலோ; சக்கை - 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் - 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி - 50 கிலோ.

எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.

ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.

இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் - 25 கிலோ; கழிவு (தீவனம்) - 330 கிலோ.

மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடிசாராயத்தைத் தயாரிக்கலாம்.

தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும்.

தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.

தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன்.
இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோமேயானால் மொலாஸûஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.

கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்

புறக்கணிக்கப்படும் விவசாயிகள்

பி.எஸ்.எம். ராவ் (Dinamani-19/5/2011)First Published : 19 May 2011 03:49:00 AM IST

விவசாயக் கடன்கள் வழங்குவதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டிவிடுவதாக மத்திய அரசு மார்தட்டிக் கொண்டிருக்கிறது. 2004-ம் ஆண்டில் இருந்து ஒவ்வோராண்டும் இந்த இலக்குகள் அதிகரித்துக்கொண்டே வந்திருக்கின்றன. ஆனாலும் அந்த இலக்குகள் தவறவிடப்படவில்லை. 2011-12-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.4.75 லட்சம் கோடி விவசாயக் கடன்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையும் அரசு நிறைவேற்றிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை.

அடுத்த பட்ஜெட் உரையில் இன்னும் கூடுதலாக இலக்கு நிர்ணயிக்கப்படும் என்பதும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படும் ஓர் அரசு, இப்படி விவசாயிகளுக்குக் கடன்களை அள்ளி வழங்குகிறதே, அப்படியானால் நாட்டில் விவசாயிகள் அனைவருக்கும் கடன்கள் கிடைக்கின்றனவா? எல்லோரும் சுபீட்சமாக இருக்கிறார்களா? அதுதான் இல்லை.

அரசு கூறிக்கொண்டிருக்கும் புள்ளிவிவரங்கள் எதுவும் நடைமுறையில் வெளிப்படவில்லை. பெரும்பான்மையான விவசாயிகள் இன்னமும் முறையான கடன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வங்கிகள் போன்ற அமைப்புகளிடமிருந்து கடன்கள் கிடைக்காததால், தனியாரிடம் அநியாய வட்டிக்குக் கடன்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதில் சிறு மற்றும் குறு விவசாயிகள்தான் அதிகம்.
அரசு வழங்கும் விவசாயக் கடன்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையாகச் சென்றடையவில்லை என்று எத்தனையோ ஆய்வுகள் தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கின்றன.

சிறு விவசாயிகளில் 87 சதவீதம் பேருக்கும், குறு விவசாயிகளில் 70 சதவீதம் பேருக்கும் அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைக்கவில்லை என்று உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன், ஒட்டுமொத்தமாகவே விவசாயிகளில் 51 சதவீதம் பேருக்கு எந்தவிதமான வங்கிச் சேவைகளும் கிடைக்கவில்லையாம்.

நாட்டில் மொத்தமுள்ள 8.93 கோடி விவசாயக் குடும்பங்களில் 4.59 கோடி (51.4 சதவீதம்) குடும்பங்களுக்கு வங்கிக் கடன்களும், தனியார் கடன்களும் கிடைக்கவில்லை என நிதி வகையில் அனைவரையும் உள்ளடக்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட ரங்கராஜன் கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கிராமம் கிராமமாக வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டு வரும் நிலையிலும், வெறும் 27 சதவீத விவசாயக் குடும்பங்களுக்கு மட்டுமே வங்கிகள் மூலமாகக் கடன்கள் கிடைக்கின்றன. அதில் மூன்றில் ஒரு பங்கினர் வங்கிக் கடன்களுடன் தனியாரிடமும் கடன் வாங்கித் துன்பப்படுகிறார்கள்.

விவசாயக் கடன்கள் தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சாரங்கி கமிட்டி, தனது ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமர்ப்பித்தது. குறு விவசாயிகளில் வெறும் 14 சதவீதம் பேருக்கு மட்டுமே வங்கிக் கடன்கள் கிடைக்கின்றன என்று அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது. விவசாயக் கடன்கள் வழங்கப்படுவதன் வளர்ச்சி 22.9 சதவீதத்தில் இருந்து 10.6 சதவீதமாகக் குறைந்திருப்பதாக அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.

அரசு கூறுவதைப்போல விவசாயக் கடன்கள் எல்லோருக்கும் போய்ச் சேர்ந்துவிடவில்லை என்பதற்கும், விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கும் இவையெல்லாம்தான் ஆதாரங்கள்.

பெரும்பான்மையான விவசாயிகளுக்கு முறையான வங்கிக் கடன்கள் கிடைப்பதில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. அதாவது, 24 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும் தனியாரிடம் கடன் வாங்கிப் பயிர் செய்வதைத்தான் இவர்கள் நம்பியிருக்கிறார்கள். பின்தங்கிய கிராமப்புறங்களில்தான் வட்டிவிகிதம் கூடுதலாக இருக்கிறது. இதனால் பணக்கார விவசாயிகளைவிட ஏழை விவசாயிகள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். தனியார் கூடுதலாக வட்டி வசூலிக்கிறார்கள் என்பதால், அமைப்பு சார்ந்த கடன்கள் நியாயமான வட்டியில் கிடைக்கின்றன என்று அர்த்தமில்லை.

ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் வங்கிகள் போன்ற அமைப்பு சார்ந்த கடன்களுக்கேகூட வெவ்வேறு வகையான வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகின்றன என்பது தெரியவந்திருக்கிறது.
7 முதல் 16 சதவீத வட்டியுடன் ஆய்வுக் கட்டணம், தவணைக் கட்டணம், சேவைக் கட்டணம், கடன் பரிசீலனைக்கான கட்டணம் எனப் பல்வேறு வகையில் விவசாயிகளிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. இதுபோக, பயிர்க்காப்பீடு பெற வேண்டும் என்கிற நிபந்தனை. அதற்கும் அதிகபட்சமான பிரீமியம் செலுத்தியாக வேண்டும்.

இவை எல்லாம் முடிந்தபிறகும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்கிற நிலைமை. இத்தனை கஷ்டப்பட்டு வங்கிகளில் கடன் வாங்குவதைவிடத் தனியாரிடமே கடன் வாங்கிவிடலாம் என்கிற எண்ணமே விவசாயிகளிடம் மேலோங்கி விடுகிறது.

உண்மையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தாண்டியும் வங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றன என்று அரசு தரும் புள்ளிவிவரங்களே தவறானவைதான். நாட்டில் 72 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள் என்பதும், அவர்களது முக்கியத் தொழில் விவசாயம் என்பதும் அரசே தரும் புள்ளிவிவரங்கள். ஆனாலும், வங்கிகள் வழங்கும் ஒட்டுமொத்தக் கடன்களில் விவசாயக் கடன்களின் விகிதம் ஒவ்வோராண்டும் குறைந்து கொண்டேதான் வந்திருக்கிறது. மொத்தக் கடனில் 18 சதவீதம் அளவுக்கு விவசாயத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற விதியும் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.

கடந்த 2003 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலத்தில் அரசுத்துறை வங்கிகள் வழங்கிய மொத்தக் கடனில் சராசரியாக 14.5 சதவீதம் முதல் 17.2 சதவீதம் மட்டும் வேளாண்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தனியார் வங்கிகள் 10.9 முதல் 15.9 சதவீதம் வரையே விவசாயத்துக்கு கடன் வழங்கியிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், வேளாண் துறையில், சிறு மற்றும் குறு விவசாயிகளின் விகிதத்துக்கு ஏற்ப அவர்களுக்கு வங்கிக் கடன் சென்றடையவில்லை என்பதுதான்.

2006-2007-ம் ஆண்டில் வங்கிகள் வழங்கிய மொத்தக் கடன் மதிப்பில் வெறும் 27 சதவீதம் மட்டுமே 1 முதல் 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்குக் கிடைத்திருக்கிறது. குறு விவசாயிகளுக்கு 26.67 சதவீதம் கடன் கிடைத்திருக்கிறது.

இதில் அதிர்ச்சியளிக்கும் அம்சம் என்னவென்றால், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தொடங்கப்பட்ட சில கூட்டுறவு வங்கிகள் போன்ற அமைப்புகள் பலவும் தங்களது நோக்கத்திலிருந்து விலகிச்சென்று கொண்டிருக்கின்றன என்பதுதான்.

கடன் விநியோகத்தை வலுப்படுத்த வேண்டும், நிதி வகையில் அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்று அரசு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த அமைப்புகள் சத்தமேயில்லாமல் வேளாண் கடன்களைக் குறைத்து வருகின்றன. கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 1992-93-ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன்களில் விவசாயிகளுக்கு மட்டும் 62 சதவீதக் கடன்கள் வழங்கப்பட்டன. இதுவே 2009-10-ம் நிதியாண்டில் வெறும் 15.67 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
கூட்டுறவு வங்கிகளும் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் கிளைகளும் சேர்ந்து வேளாண்மையைச் சுபீட்சமாக்கியிருக்க வேண்டும். ஆனால், விவசாயக் கடன்களை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

ஒரு பக்கம் கூட்டுறவு வங்கிகள் தங்களது லாபத்தை இழந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கிராமப்புறங்கள் பக்கமே போக விரும்பாத வர்த்தக வங்கிகள் எல்லாப் பகுதிகளிலும் கடைவிரித்து லாபத்தை அள்ளிக்கொண்டிருக்கின்றன.

எல்லாம் வணிகமயமாகிவிட்டதால், 60 சதவீதம் பேருக்கு வேலையும், நாடு முழுமைக்கும் உணவும் தரும் ஒரு துறைக்கு கடன் வழங்குவதை யாருமே விரும்பவில்லை என்பதும்தான் உண்மை.

இதுபோலவே கிராமப்புறங்களில் வசிக்கும் பின்தங்கிய மக்களுக்காகக் கடன்கள் வழங்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பிராந்திய ஊரக வங்கிகளும் 1992-93-ல் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலான பிறகு தங்களது பாதைகளை மாற்றிக் கொண்டுவிட்டன. பின்தங்கிய மக்களுக்குக் கடன்கள் வழங்குவதைக் குறைத்துக் கொண்டன.

நூறுசதவீதம் பின்தங்கிய மக்களுக்கு மட்டுமே கடன்கள் வழங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகள் இப்போது 10 சதவீதம் கடன்களை மட்டும் பின்தங்கிய மக்களுக்கு ஒதுக்குவது என முடிவு செய்துவிட்டன.

கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய இந்த வங்கிகள் நகர்ப்புறங்களில் கிளைகளை விரிவுபடுத்துவதிலேயே தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இப்படி மற்ற வர்த்தக வங்கிகளைப்போலவே லாப நோக்குடன் செயல்படுவதற்கு, பிராந்திய ஊரக வங்கிகள் தேவையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இன்னொரு பக்கம் வர்த்தக நோக்குடன் செயல்படும் வங்கிகள், ஏற்கெனவே கிராமப்புறங்களில் செயல்பட்டு வந்த தங்களது கிளைகளை ஒவ்வொன்றாக மூடிக்கொண்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களில் இது தெளிவாகத் தெரிகிறது.
வேளாண்மையில் அரசு முதலீடு குறைப்பு, இடுபொருள்களின் விலை உயர்வு, விளை பொருள்களுக்கு லாபமில்லாத விலை உள்ளிட்டவைதான் விவசாயத்துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குக் காரணம் என்பதை பல்வேறு ஆய்வுகளும் உறுதி செய்திருக்கின்றன.

தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கியதே விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என்பதையும் நாம் அறிவோம். வங்கிகள் போன்ற அமைப்பு சார்ந்த கடன்கள் வழங்கும் முறை தோல்வியடைந்துவிட்டதையே இவை காட்டுகின்றன.

புதிய பொருளாதாரக் கொள்கை அமலான பிறகு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை ஒவ்வோர் அரசும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், உண்மையில் அரசின் நடவடிக்கைகளும் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையும் தேவையற்றவர்களை, ஏழைகளைப் புறக்கணிக்கும் வளர்ச்சியை நோக்கியே அமைந்திருக்கின்றன.

நாட்டுக்கே உணவளிக்கும் சமூகம் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் கடன்கள் கிடைக்காமலும், லாபம் இல்லாமலும் துன்பப்பட்டு வருகின்றனர். எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, விவசாயத்துக்கு அதிகக் கடன்கள் வழங்கப்படுவதாக அரசு கூறிக் கொண்டிருக்கிறது. கடன் இலக்குகள் எட்டப்பட்டுவிட்டதால் மட்டுமே விவசாயம் விருத்தியடைந்துவிடாது.

தோல்விகளை ஒப்புக்கொண்டு உண்மையான அக்கறையுடன் திட்டங்களை வகுப்பதற்கு ஆட்சியாளர்கள் முன்வந்தால் மட்டுமே விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்க முடியும். அதுதான் அரசு கூறிக்கொண்டிருக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழி.

வீரியம் இழந்த புதிய விதைப்புரட்சி

ஆர்.எஸ்.நாராயணன், Dinamani/26-05-2011) First Published : 26 May 2011 12:29:53 AM IST

எதிர்கால உணவுத் தேவையை நிறைவேற்ற இந்தியா 2020-ல் நுழையும்போது அரிசி உற்பத்தி மட்டும் 12.21 கோடி டன்னுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய திட்டக்கமிஷன் இலக்கு நிர்ணயித்தது.

இன்றுள்ள வளர்ச்சி வீதம் நீடித்தால்-அதாவது ஆண்டுக்கு 1.34 சதம் என்றால் 2020-ல் 10.6 கோடி டன் அரிசிதான் இயலும். 12.21 கோடி டன் இலக்கை எப்படி நிறைவேற்றுவது என்ற கேள்விவந்தபோது, 2007-ல் தேசியப் பசிப்பிணிப் பாதுகாப்பு மிஷன் உருவாக்கப்பட்டு, 2011-12-ல் அரிசி உற்பத்தியை 10 கோடி டன்னுக்கு உயர்த்த முடிவானது. அரிசியுடன் கோதுமை மற்றும் பருப்பு உற்பத்தி உயர்வுக்கான வரையறையும் தேசியப் பசிப்பிணிப் பாதுகாப்பு மிஷனில் செய்யப்பட்டது. இவற்றுக்காக 4,882 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் அரிசி உற்பத்தி உயர்வுக்கான பங்கு 1963 கோடி ரூபாய். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ""கிழக்கு மாநிலங்களில் இரண்டாவது பசுமைப்புரட்சி'' என்று கோஷமிட்டு, ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா நிதியிலிருந்து 400 கோடி ரூபாய் பணத்தை மேற்படி மாநில அரிசி, பருப்பு, எண்ணெய் வித்து, உற்பத்தி உயர்வுக்காக ஒதுக்கியது நினைவிருக்கலாம். கிழக்கு மாநிலங்கள் என்றால் இவற்றில் பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒரிசா, கிழக்கு உ.பி. அடங்கும்.

இந்தியாவின் கிழக்குப் பிராந்தியங்களில் அரிசியின் உற்பத்தித்திறன் - அதாவது தலா ஹெக்டேர் விளைச்சல் பஞ்சாப் - ஆந்திரப் பிரதேசம் - தமிழ்நாடு அளவைவிடக் குறைவாயிருப்பதன் காரணம் வீரிய ரகம் அல்லது ஒட்டுவீரிய ரக விதைப்பயன் குறைவு என்று கூறும் கிரிக்கெட் விவசாய அமைச்சர் சரத்பவார் சீனாவைப் பின்பற்ற வேண்டுமென்று கூறுகிறார்.

சீனாவில் சுமார் 3 கோடி ஹெக்டேர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் சுமார் 2 கோடி ஹெக்டேர் நிலத்தில் வீரிய ஒட்டு ரக நெல் பயிராகிறது. சீனாவில் வீரிய ஒட்டு ரகம் சுயம்பூ ஐ.ஆர்.ஆர்.ஐ. மணிலா தயாரிப்பு அல்ல. 1964-ல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ள அந்தத் தொழில்நுட்பத்தில் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் ஒரு வரிசையில் மலட்டு நெல்லும் ஒரு வரிசையில் வீரிய ரகமும் நட்டு வீரிய ஒட்டு என்ற ஹைபிரீட் விதை நெல் உற்பத்தியாவதாக ஒரு கருத்துண்டு.

மலட்டு நெல்லையும் வீரிய நெல்லையும் கலந்து வீரிய ஒட்டு விதை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிந்த இந்திய அரிசி விஞ்ஞானி ரிச்சாரியோ, இந்தியாவுக்கு ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வேண்டாம் என்று ஃபோர்டு பவுண்டேஷனை எதிர்த்துப் போர் தொடுத்தார். ரிச்சாரியோ, கட்டாக் அரிசி ஆய்வு நிலையத்தின் தலைமை விஞ்ஞானியாகவும் டைரக்டராகவும் செயல்பட்டார்.

ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வேண்டாம் என்றதால் அவரை ஓரம் கட்டினார்கள். அவர் வழக்குத் தொடர்ந்தார். அவருக்குச் சம்பளம் நிறுத்தப்பட்டது. முடிவில் இதய நோய் வந்து இறந்துபோனார். ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் விதையை அப்போதே அவர் வேண்டாம் என்றார். இப்போதுதான் மத்திய அரசு ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வீரியம் இழந்ததை உணர்கின்றனர். இப்போது சீனாவிலிருந்து வீரிய ஒட்டு விதை நெல்லை இறக்குமதி செய்யலாமென்று யோசிக்கப்படுகிறது.

சீனாவின் உற்பத்தித்திறன் 6.61 டன் நெல். இந்தியா 3.37 டன். இதன் காரணம் வீரிய ஒட்டு ரக நெல் மட்டுமல்ல. சீனாவில் 90 சதவீத சாகுபடி நிலம் நீர்வளம் நிரம்பியது. இந்தியாவில் சுமார் 50 சதவீத நெல் சாகுபடி நிலம் மட்டுமே நீர்வளம் உள்ளது. மானாவாரி நெல் சாகுபடி சீனாவில் இல்லை. தவிரவும் இந்தியாவைவிட சீனாவில் ரசாயன உரம் அதிகம் வழங்கப்படுகிறது. ஆகவே, சீனாவிலிருந்து வீரிய ஒட்டு விதை நெல்லை இறக்குமதி செய்வதால் மட்டும் உற்பத்தியை உயர்த்த இயலாது. நமது சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல மகசூல் தரக்கூடிய நெல் விதைகளைத் தேர்வு செய்வது நல்லது.

அரிசி உற்பத்தியை உயர்த்த வீரிய ஒட்டு நெல் விதைகளே சரியான தீர்வு என்று கூறிய அமைச்சர் சரத் பவாரின் யோசனையை ஏற்று கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் உள்ள அனைத்து அரிசி ஆராய்ச்சி நிலையங்களும் முழு மூச்சில் செயல்பட்டு வெளியிட்ட வீரிய ஒட்டு எதுவுமே நல்ல பலன் தரவில்லை. குறிப்பாக, கிழக்குப் பிராந்தியத்தில் தோல்வியே.

தோல்விக்கு என்ன காரணம் என்று யோசித்தபோது, இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விதை ரகங்கள் முதற்கண் தடுமாறும் தட்பவெப்பத்தைத் தாக்குப் பிடிக்க வேண்டும். ஆனால் அந்த திறன் அவற்றிற்கு இல்லை.

மழை வெள்ளத்தால் பாதிப்படையாத மடுவு முழுங்கி போன்ற பல ரகங்கள் கங்கைப் பிரதேசங்களில் உண்டு. இதற்கு நேர்மாறாக நீர் இல்லாமல் வறட்சியுறும் சூழ்நிலைக்கு ஏற்ப வறட்சி தாங்கும் நெல்விதை ரகங்களும் உண்டு. குளிரைத் தாங்கி வளரும் நெல் ரகங்களும் உண்டு. உவரைத் தாங்கி வளரும் நெல் ரகங்களும் உண்டு. மானாவாரி ரகங்களும் உள்ளன. மாநில அளவில் புவியியல் தட்பவெப்ப மாற்றங்களை அனுசரித்துப் பயிராகும் விதை ரகங்கள் வீரிய ஒட்டு ரகங்களை விடவும் விளைச்சல் கூடுதலாயுள்ளன.

வீரிய ஒட்டு ரகங்களை சிறு, குறு விவசாயிகளாலும் பழங்குடி விவசாயிகளாலும் ஏற்க முடியாது. வீரிய ஒட்டுரக நெல்லுக்கு ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். அவற்றின் சாகுபடி அடக்கச் செலவும் அதிகம் என்பதால் கிழக்குப் பிராந்திய விவசாயிகள் ஏற்க மறுக்கின்றனர். எனினும், பணவசதியுள்ள விவசாயிகளுக்கு தட்பவெப்பப் பிரச்னை இல்லாத புவியியல் சூழல் உள்ள நிலங்களில் மட்டுமே சீனாவில் விளையக்கூடிய உற்பத்தித்திறனைப் பெற முடியும், பெற்றும் உள்ளனர். ஆனால், தட்பவெப்பத்தை அனுசரித்து எல்லா நிலங்களுக்கும் பொருந்தும் விதை ரகங்கள்தான் இன்றைய தேவை.

குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே சிறப்பாக விளையும் சீன வீரிய ஒட்டு பெரும்பாலான இடங்களுக்குப் பொருந்தாது. எதிர்பார்க்கும் விளைச்சலைப் பெற முடியாது என்று வேளாண் துறைசார்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரிசா மாநிலத்தில் பருவம் - பட்டம் - புவியியல் தட்பவெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பல பாரம்பரிய நெல் விதைகளைப் பயிர் செய்து வெற்றி கண்டுள்ள நடாபர் சாரங்கி என்ற விவசாயியின் வெற்றிக்கதை விவசாய விஞ்ஞானிகளின் கவனத்தை மிகவும் கவர்வதாயுள்ளது.

77 வயதாகும் சாரங்கி, ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். கோர்தா மாவட்டத்தில் நரிஷோ என்ற கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் 350 வகையான நெல் ரகங்களை விதைப் பயனுக்கென்றே சாகுபடி செய்து உள்ளூர் மக்களுக்கு வழங்குகிறார். அவருடைய பாரம்பரிய விதைகளை வாங்கிச் செல்லும் விவசாயிகள் நல்ல லாபத்தில் விவசாயம் செய்வதுடன் விளைச்சலும் கணிசமாயுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

பசுந்தாள் உரம், இயற்கை உரம் கொண்டு நெல் பயிரிட்டு விளைந்ததை அறுவடை செய்து அரிசியாக்கி மணக்க மணக்க உண்பதுடன் நல்ல விலைக்கு விற்பனையும் செய்கின்றனர். சாரங்கி சேகரித்துள்ள பாரம்பரிய விதைகளின் பெயர்களில் பக்திமணமும் உண்டு. உதாரணம்: கேதார கௌரி, பத்ம கிஷோரி, கோவிந்த போக், காஸ்காமினி, ரத்னசூடி, கன்னையா பத்தியா, காலாஜீரா (கருப்பு சீரகச்சம்பா). இவரிடம் உள்ள மடுவு முழுங்கி விதைகள் வெள்ளம் வடிந்த பிறகும் 25 கிளைகள் (டில்லர்) வெடித்து வளர்கின்றன. வெள்ளத்தில் தலை உயர்ந்து வளரும். அதேபோல் சாரங்கி வழங்கும் வறட்சியைத் தாங்கி வளரும் நெல் பயிரின் தண்டு மிக மிக உறுதியுடன் விளங்குகின்றனவாம்.

நாட்டுக்கு ஏற்ற விதை நெல் ரகங்களை நல்ல முறையில் தேர்வு செய்து இனப்பெருக்கம் செய்யும் பணியை உண்மையில் வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும். பணம் என்னவோ கோடிக்கணக்கில் நாட்டுக்குத் தேவையற்ற விதை ரகங்களைக் கண்டுபிடிப்பதில் பல்கலைக்கழகங்கள் செலவு செய்வது உண்மைதான்.
இதில் வேடிக்கை என்னவென்றால் பணச்செலவே இல்லாமல் சாரங்கி கண்டுபிடித்த நாடியா ஃபூலோ, சோரா, காலாக்கியரி போன்ற மானாவாரி நெற்பயிருக்கு ஈடாகப் பல கோடி ரூபாய் பணம் செலவழித்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்துள்ள ரகங்கள் போட்டி போடவே தகுதி இல்லை என்று அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆகவே பணம் முக்கியமல்ல. தேடுதல் வேட்டைதான் இன்றைய தேவை. அரசாங்கம் வழங்கும் விதைகள் வீரியம் இழந்து வரும் சூழ்நிலையில் - இனி எதிர்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாரங்கிபோல் ஒரு விவசாயி தோன்றிவிட்டால் எத்தனை பஞ்சம் வந்தாலும் அதை இந்தியா தாங்கி நிற்கும். எல்லோருக்கும் எல்லாமும் வழங்கக்கூடிய இந்தியாவில் என்றுமே சோற்றுக்குப் பஞ்சம் வரும் வாய்ப்பே இராது

Monday, June 6, 2011

மரபணு மாற்றம் - இந்தியாவை மலடாக்கும் சதி


மரபணு மாற்றம் - இந்தியாவை மலடாக்கும் சதி
ஆர்.எஸ். நாராயணன்

வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்த நாம் உண்ணும் அனைத்துப் பொருள்களிலும் விஷத்தை உருவாக்கும் புதிய உயிரித்தொழில் நுட்பம் உண்மையில் மனித உயிர்களைக் கொல்லும் நுட்பமாக மாறிவருவதை இந்தியர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை.

வேளாண்மையில் விஷத்தைப் பரப்பும் மரபணு மரண ஆராய்ச்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்ட சூழ்நிலையில், நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகள், பருப்பு, தானியங்களில் மெல்ல மெல்ல அணுசக்தி விஷமும் கதிர்வீச்சாகப் பரவுவதை யாரேனும் கவனித்தது உண்டா?

பசுமைப்புரட்சியின் அலங்கோலத்தால் வீரிய ரக விதை, ரசாயன உரம், உயிர்க்கொல்லிப் பூச்சி மருந்துகள் காரணமாக விஷப்பரவல் மண், மனிதன், பறவை, விலங்கினம் என்று நமது உயிர்ச்சூழலே நோயுற்று அதிலிருந்து நாம் மீள்வதற்குள் மரபணு மாற்றம் என்ற அடுத்த விஷம் தயாராகிவிட்டது. ""வாழ்வதெல்லாம் வைத்தியத்துக்கே'' என்ற அவலம் நம்மைச் சூழ்ந்துவிட்டது.

மரபணு மாற்றம் என்பது பல புதிய அயல் அணுக்களைத் தோற்றுவிக்கும். பன்முகமான விஷப்பரவலைத் தோற்றுவித்து அதனால் கல்லீரல், சிறுநீரகம், கணையம், இதயம், ரத்தக்குழாய் எல்லாம் பழுதுபடும். புற்றுநோய் அபாயமும் உண்டு. பசுமைப் புரட்சி கக்கிய விஷம் நாகப்பாம்பு என்றால், மரபணு மாற்றம் விளைவிக்கும் விஷம் கட்டுவிரியன்.

இந்தியா ஏமாந்த நாடு என்பதாலும், இந்திய விஞ்ஞானிகள் பணத்துக்கு விலைபோகக் கூடியவர்கள் என்பதாலும் அமெரிக்கா இந்தியாவை மலடாக்க முனைந்துவிட்டது. இந்தியாவில் நாம் தினமும் உண்ணக்கூடிய பொருள்களில் மரபணு மாற்றம் செய்த விதைப்பயன்களின் விவரங்களை அறிந்தால் மூச்சு நின்று மூர்ச்சையாகி விடுவோம்.

இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண்மை ஆய்வு நிலையங்கள் மட்டுமல்ல; வேளாண்மைத் தொடர்பு இல்லாத அணுமின் ஆய்வு நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் போன்றவை இணைந்து யு.எஸ். உயிரித் தொழில்நுட்ப உடன்பாட்டின் அடிப்படையில் உண்ணும் பொருள்களிலும் கதிர்வீச்சைப் பாய்ச்சுகின்றன.

இந்தியாவின் மரபணு மாற்றத் தொழில்நுட்பத் தகவல் மையமான ""இக்மோரிஸ்'' வழங்கும் தகவலின்படி, மிகவும் புனிதமான ஏற்றுமதி மதிப்புள்ள ஆயுர்வேத மூலிகையான அசுவகந்தா உள்பட, அரிசி, கோதுமை, மக்காச்சோளம், துவரை, உளுந்து, கொண்டைக்கடலை, தட்டாம்பயறு, கேழ்வரகு, கம்பு, மிளகு, ஏலக்காய், பிராமி, தேயிலை, கரும்பு, சோளம், நிலக்கடலை, சோயா, கடுகு, பருத்தி, சணல், மூங்கில், ஆமணக்கு, ரப்பர், புகையிலை.... உள்ளிட்ட 74 பயிர் வகைகளில் மரபணு ஆய்வுகள் நிகழ்த்த அனுமதிக்கப்பட்டு - எந்தவிதமான பாதுகாப்பு முறையும் இல்லாமல் விஷம் பரப்பும் திட்டம் வேகமாகப் பரவி வருகிறது.

இப்படிப்பட்ட ஆய்வுகளுக்கு யார் யார் நிதி உதவி தருகிறார்கள்?

யு.எஸ். தொழில்நுட்ப உடன்பாட்டுக்கு மக்களின் வரிப்பணம் செலவாகிறது. இந்தியாவில் ஏறத்தாழ 400 ஆராய்ச்சி அமைப்புகள் எந்தவிதமான பாதுகாப்பு விதிகளையும் கையாளாமல் மரபணு மாற்றச் சோதனையில் ஈடுபடுகின்றன.

அமெரிக்காவில்கூட மரபணு ஆய்வு சோதனை வயல்கள் உகந்த பாதுகாப்பு விதிகளை மீறாமல் செயல்படுகின்றன. பல்வேறு தனியார் அமைப்புகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் பாபா அணு ஆராய்ச்சி மையம், ராணுவ ஆராய்ச்சி - வளர்ச்சி நிறுவனம், நபார்டு நிதி உதவி செய்கின்றன.

அமெரிக்கா தவிர, வேறு பல மேற்கு நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பட்ஜெட் ஒதுக்கீடு உண்டு. மத்திய அரசின் பயோ டெக்னாலஜி துறை மானியம் வழங்கி மரபணு ஆய்வை ஊக்குவிக்கிறது.

மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் எதுவெனில், இந்திய மண் முழுவதிலும் - இந்தியாவே மரபணு மாற்றம் தொடர்பான விஷப்பரீட்சையின் கூடாரமாகிவிட்டது. இந்தியாவைவிட ஏழ்மையான நாடுகளில்கூட இந்த விஷப்பரீட்சை இப்படி நிகழவில்லை.

ஏன் இந்த விஷப்பரீட்சை என்று கேட்டால், ""இந்தியாவில் இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு இதுவே வழி'' என்று பதில் கூறி, அவசரம் அவசரமாக எல்லா பாதுகாப்பு விதிகளையும் புறக்கணித்துவிட்டு இரண்டாவது விஷப்பரவல் தொடங்கிவிட்டது.

இரண்டாவது விஷப்பரவல் எதுவெனில், காற்று மூலம் மரபணு மாற்றப் பயிர்களின் மலர்களிலிருந்து வெளிப்படும் மகரந்தப் பொடி காற்றில் பரவாமல் இருக்க மரபணு மாற்றச் சோதனை வயல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மரபணு மாற்றம் செய்யப்படாத பயிர்களைப் பயிர் செய்து அந்த இடத்துக்கும் அப்பால் உள்ள தனியார், பொது நிலங்களில் மரபணு மாற்றத் துகள் பரவாதபடி கவனிக்க வேண்டும்.

இந்தியாவில் சுமார் 400 மரபணு மாற்றச் சோதனை வயல்கள் என்ற போர்வையில் மரபணு விஷத் துகள்களைப் பரவவிட்டு, நமது இயற்கையான பாரம்பரிய ரகங்களை முற்றிலும் அழித்துவிட்டு, இனி எந்த விதை என்றாலும் மரபணு மாற்ற விதை மட்டுமே அங்காடியில் விற்கப்பட வேண்டும் என்ற வெறித்தனம் விதை நிறுவனங்களுக்கு விலை போய்விட்ட விஞ்ஞானிகளிடம் உள்ளது.

இந்த விஷயத்தில், அதாவது இந்தியாவுக்குள் மரபணு மாற்ற விஞ்ஞானம் வரக்கூடாது என்ற கொள்கையுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளாண்மைச் சூழலியல்வாதிகளுடனும், விழிப்புணர்வுள்ள இயற்கை விவசாயிகளுடனும் அரசியல்வாதிகளும் சேர்ந்துள்ளது நல்ல திருப்பம். சிவப்புக் கொடி காட்டியவர் வேறு யாருமல்ல, பிகார் முதல்வர் நிதீஷ் குமார்தான்.

சமஷ்டிப்பூர் அருகில் உள்ள புசா நிறுவனத்தில் - இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் கிளை அமைப்புக்குரிய லிச்சிலான் தோட்டத்தில் மரபணு மாற்ற மக்காச்சோளப் பயிர் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பட்டிருந்ததை எதிர்த்து பிகார் அரசு மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது.

சுமார் 600 சதுர மீட்டரில் எத்தகைய எச்சரிக்கை, பாதுகாப்பும் இல்லாமல் மரபணு மாற்றப் பயிர் சாகுபடி செய்யப்பட்டதை எதிர்த்த நிதீஷ் குமார், பிகார் மாநிலத்தில் மாநில உயிரித் தொழில்நுட்ப கூட்டுக் கமிட்டியே இல்லை என்பதால் இது சட்டவிரோதமானது - உச்ச நீதிமன்ற உதவியை நாடுவோம் என்று மத்திய அரசுக்குத் தாக்கீது அனுப்பவே, அப்போது சுற்றுச்சூழல் அமைச்சராயிருந்த ஜெய்ராம் ரமேஷ் உடனே அந்த மக்காச்சோள மரபணு மாற்றச் சோதனை வயலை அழிக்க உத்தரவிட்டார்.

மார்ச் 11-ம் தேதி விடியற்காலை டிராக்டர் மூலம் அந்த மக்காச்சோளப் பயிரை களை வெட்டுவதுபோல் வெட்டி மண்ணுக்குள் புதைத்து, உழுது, உளுந்தும் பயறும் விதைத்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் விஞ்ஞானிகள் நடந்துகொண்டனர்.

உண்மையில் சோதனை வயல் எரிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு உழவோட்டி விஷப்பயிர்களை மண்ணுக்குள் களையாக வெட்டிப் புதைத்ததையும் நிதீஷ் குமார் கண்டித்துள்ளார். விஷ மக்காச் சோளத்தை அழிக்கும்போது, மாநில விவசாயத் துறைக்குத் தகவல் தராமல் தகாத முறையில் மத்திய அரசு செயல்படுவது ஏன்?

மரபணுப் பயிர் சோதனை வயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசியல்வாதிகளில் முதன்மையாகத் திகழும் நிதீஷ் குமாருடன் முன்னாள் கேரள வேளாண்மை அமைச்சர் முல்லக்கார ரத்னாகரன், மத்தியப் பிரதேச விவசாய அமைச்சர் ராமகிருஷ்ண குஷ்மாரியா, ஹிமாசலப் பிரதேச அமைச்சர் பிரேம்குமார் தூமதும் கைகோத்துள்ளனர். கேரள முன்னாள் அரசு மரபணு மாற்றத் தொழில் நுட்பத்துக்கே ஒட்டுமொத்தத் தடையை விதித்துள்ளது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், அது திமுக என்றாலும் சரி, அதிமுக என்றாலும் சரி மரபணு மாற்றத் தொழில் நுட்பம் தோற்றுவிக்கும் ஆபத்தைப் பற்றிய உணர்வே இல்லை என்பதாலும், எந்த எதிர்ப்பும் காட்டாமல் மத்திய அரசின் ஆதிக்கத்தை ஏற்கும் சுயநலப் பண்பு ஓங்கியிருப்பதாலும் தமிழ்நாட்டில் மரபணு மாற்றப் பயிர்களின் சோதனை வயல்கள் பொறுப்பற்ற சில வேளாண்மை விஞ்ஞானிகளின் பிடியில் உள்ளன.

விலைபோய்விட்ட விஞ்ஞானிகளிடம் நியாயத்தை எதிர்பார்க்க இயலாது. தமிழ்நாட்டில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் மரபணு மாற்றச் சோதனை வயல்கள் உள்ளன.

என்ன எச்சரிக்கை? என்ன தற்காப்பு? யாருக்குத் தெரியும்? விஷ மகரந்தப் பரவல் வேலையைக் காண்பித்தால் பூக்கும் தாவரங்கள், தேன் எல்லாம் விஷமாகும். மலட்டு மகரந்தங்கள் மற்ற பயிர்களுக்குப் பரவி - தாய்மைப் பண்புள்ள பயிர்கள் எல்லாம் காயடித்த காளைகளாகும்.

இந்திய விவசாயம் துகிலுரியப்பட்டுவிட்டது. துகிலுரிந்தது வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் அல்லவா?

எரிக்கப்பட வேண்டியவை மரபணு மாற்றப் பயிர் சோதனை வயல்கள் அல்லவா?