our inspiration

Thursday, October 10, 2013

கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும் சிறுநீர்



மழையும் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் நாட்களில் வயிற்றிலும் மப்பும் மந்தாரமும் சூழ்ந்து நிற்கும். வயிற்றிலுள்ள கதகதப்பினால் சிறுநீரகங்களின் உற்பத்திக் கேந்திரங்கள் கட்டுப்பாட்டுடன் இயங்குகின்றன. இந்தக் கதகதப்பு மந்தப்படுவதால், சிறுநீரின் உற்பத்தியானது சிறுநீரகங்களில் அதிகரித்து அடிக்கடி வெளியேறுகிறது. அதனால் வயிற்றிலுள்ள மப்பும் மந்தாரமும் மாறி அதன் சுறுசுறுப்புக்கும் சூடான நிலையைப் பெறுவதற்கும் தக்க உதவி தேவை. தீபாவளி லேகியத்தை இந்தக் காலகட்டங்களில் நம் முன்னோர் தயாரித்து தினம் காலையில் சாப்பிட்டு வயிற்றின் மந்த நிலையைப் போக்கி சிறுநீரின் அதிக அளவிலான போக்கைக் கட்டுப்படுத்தினர். நீங்களும் தீபாவளி லேகியத்தை எளிதாக வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடலாம். இதற்குத் தேவையானவை:

திப்பிலி 50 கிராம், ஓமம் 50 கிராம், கண்டந்திப்பிலி 50 கிராம், ஏலக்காய் 5 கிராம், ஜாதிக்காய் 5 கிராம், சுக்கு 25 கிராம், மிளகு 25 கிராம்,சீரகம் 25 கிராம், கொத்துமல்லி 25 கிராம்.

ஜாதிக்காய், ஏலக்காய் நீங்கலாக மற்றவற்றை வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு இடித்துச் சூரணமாக்கிக் கொள்ளவும். வெல்லம் 300 கிராம் அளவு தண்ணீரில் கரைத்துப் பாகாக்கி  அதில் 50 கிராம் நெய் விட்டு இந்தச் சூரணத்தைப் போட்டுக் கிளறி வைத்துக் கொள்ளவும். சுமார் 1 -2 டீ ஸ்பூன் அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும்.

மார்கழியும் தையும் ஹேமந்த ருதுவெனப்படும். இவ்விரு மாதங்களில் பனி அதிகமாக உணரப்படும். பொதுவாகவே இக்காலத்தில் இரவு நேரம் அதிகம். பகல் நேரம் குறைவு. பகலிலும் பனி வாடை காலை 8-9 மணி வரையிலும் இருக்கும். மாலை 5 மணியிலிருந்தே பனி வாடை ஏற்பட்டுவிடும். ஆகவே அதிலிருந்து உடலைக் காப்பாற்றும் கம்பளி முதலிய உடைகளின் கதகதப்பு, தோலின் வறட்சி ஆகியவற்றின் காரணமாக ஜீரண கோசங்களுக்குத் தேவையான சூடு சற்று அதிகமாகவே இருக்கும். உணவைச் செரிக்க வைக்க வேண்டிய செயல் சிறுநீரகங்களுக்கு இல்லாததாலும், சூடு வயிற்றுப் பகுதியில் குவிந்திருப்பதாலும், சிறுநீரகங்கள் வெளியிலுள்ள பனி வாடையால் குளிர்ந்திருக்கும்.  இந்தக் குளிர்ச்சியின் தாக்கத்தினால், நீர்ச்சுரப்பு அப்பகுதியில் கூடுகிறது. இதுவே சிறுநீர்ப் பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமாகிறது.  இந்தக் காலத்தையொட்டி ஜீரண உறுப்புகளின் நிலைக்கேற்ப அமைந்த உத்தம உணவு பொங்கல். அதன் செரிமானத்தில் , உடல் உட்புற சூட்டைத் தளர்த்தி, எல்லாப் பகுதிகளுக்கும் சீராகப் பரப்புவதால், சிறுநீரகங்களுக்குத் தேவையான சூடு கிடைப்பதால், அதன் செயல்பாடு சீராகி, நீர்ச்சுரப்பைக் கட்டுப்படுத்தும், விடியற்காலையிலேயே எழுந்து வெந்நீரில் குளித்து காய்ந்த உடை உடுத்தி வெளிக் குளிரைப் போக்கிக் கொள்வதன் மூலமாகவும், சிறுநீர் அதிக அளவில் போவதைத் தடுத்துக் கொள்ளலாம். ஐந்து உரைப்புள்ள பொருட்களாகிய திப்பிலி, கண்டந் திப்பிலி, செவ்வியம், கொடி வேலி வேர்ப்பட்டை, சுக்கு எனும் பஞ்சகோலம் சேரும் இந்த காந்தம் கஷாயத்தைக் காலை, மாலை குடித்து வருவது மிகவும் நல்லது. 15 மி.லி. கஷாயத்தை 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை
உணவுக்கு 1 மணி நேரம் முன்பாகச் சாப்பிடவும்.

எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,  நசரத்பேட்டை

Sunday, June 30, 2013

கார், வீடு, கண்ணாடி துடைக்கும் ரசாயனம்


பொதுவாக மழைக்காலங்களில் கார்கண்ணாடிகளை சுத்தமாகப்பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று, அதற்க்கு  உறுதுணையாக இருப்பவை கண்ணாடியை சுத்தப்படுத்தும் ரசாயனங்கள், இவை வண்டியின் முன்புறமுள்ள சிறு கேனில் நிரப்பப்பட்டு மோட்டார்மூலம்  தேவையானபோது  கண்ணாடிமீது செலுத்தப்பட்டு சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பான  பயனத்துக்கு இவை மிகவும் முக்கியமானவை ஆகும்.

இக்கலவைகள்  கடைகளில் பல பெயர்களில் பலவிதமான விலைகளில் கிடைக்கின்றன, பொதுவாக வண்டியை சர்வீஸ் செய்யும்போது  அங்கு இத்திரவத்தை  நிரப்பிவிடுவார்கள்  ஆனால் மழை காலங்களில்  அடிக்கடி இதை நாம் பயன்படுத்தநேரும்போது  இது விரைவில் தீர்ந்துவிடும் எனவே சுத்தப்படுத்தும் திரவத்தை வெளியில் வாங்கவேண்டிய தேவை எழுகிறது. வண்டிகளுக்கான சரக்குகள் விற்கும் கடையில் கடையில்  காருக்கு என்று கேட்டால் ரூ 300 அளவில் 1/2 லிட்டர் கேனாகக் கிடைக்கும்,  விலையைக்கேட்டு  அதிர்ச்சியடைபவர்கள்  குழாய்தண்ணீரையோ அல்லது அதனுடன் சிறிது திரவசோப்பு  கலந்தோ வண்டியில் ஊற்றிப் பயன்படுத்துவர்,

இவ்வாறு குழாய்த்தண்ணீரையும்  சோப்பையும் கலந்து பயன்படுத்தும்போது  தண்ணீரில் உள்ள தாதுப்புகள்  காரில் உள்ள  இத்திரவம் வரும் நுண்குழாய்களில் படிந்து இதன் செயல்பாட்டைப்பாதிக்கும்,  சோப்பு  சரியான அளவில் பயன்படுத்தப்படவில்லை எனில் அவை படலம்போல் படிந்து  காட்சித்தெளிவைப் பாதிக்கும்.

இதிலிருந்து தப்பிக்க நாம் கடைகளில் விற்கும் வீட்டுக்கண்ணாடிகளை சுத்தப்படுத்தும் திரவங்களை வாங்கி அவற்றை அப்படியே நிரப்பிப் பயன்படுத்தலாம் காருக்கான கலவைகளின்  விலையோடு ஒப்பிடுகையில்  ஓரளவு இவை பரவாயில்லை,  ஆனால் வீட்டில் இவற்றை நாம் பயன்படுத்துவதற்கும் காரில் பயன்படுத்துவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு காரணமாக இவையும் பொருளாதார ரீதியில் சிறப்பானவை அல்ல

சரி வேறு என்னதான் வழி?

அதுதான் நமக்கு கைவந்த கலை ஆயிற்றே! வேறென்ன?  நாமே செய்துவிடவேண்டியதுதான்!

செய்முறை

தேவையான பொருட்கள்
  1. காய்ச்சி வடித்த நீர் ( Distilled water Not acid water) 2 லி
  2. 30 மிலி வினிகர் ( இயற்கை முறையிலும் கிடைக்கிறது)
  3. 5 மிலி டிஷ் வாஷ் 
  4. 100 மிலி ரப்பிங் ஆல்கஹால் (Surgical spirit- iso propyl alcohol) 
  5. 4 லி கொள்ளளவுகொண்ட கேன்
முதலில் கேனில் 100 மிலி ரப்பிங் ஆல்கஹாலை எடுத்துக்கொள்ளவும் பின் அத்துடன் 2 லி காய்ச்சிவடித்த நீரை கலக்கவும், பின்பு மற்றவற்றை ஒவொன்றாகக் கலக்கவும், நன்கு கலக்கிய கலவையை வண்டியிலுள்ள  Reservoir Cane ல் சேர்க்கவும். இப்பொழுது கன்ணாடியைக் கழுவ Homemade Windshield Washer Fluid,தயார்

Saturday, January 19, 2013

மாடே இல்லாமல் பால் உற்பத்தி!



By கே.என். ராமசந்திரன்
First Published : 19 January 2013 01:34 AM IST



தன்னால் முடியாத ஒரு காரியத்தைச் செய்துதரச் சொல்லி நச்சரிக்கிறவனைப் பார்த்து, ""காளை மாடு, காளை மாடு என்கிறேன், உழக்குப்பால், உழக்குப்பால் என்று கழுத்தறுக்கிறாயே'' என்று சீறுவார்கள். ஆனால், மாடே இல்லாமல் பாலை உற்பத்தி செய்கிற வித்தை சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் கைவந்த கலையாகிவிட்டது.



2008-ஆம் ஆண்டில் சீனா மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பால் மற்றும் குழந்தை உணவான பால் பொருள்களில் வேதிப்பொருள்கள் அதிக அளவில் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அது, ""மாபெரும் பால் ஊழல்'' என்று பிரபலமானது.

 ஏராளமான குழந்தைகள் உள்பட பலர் நோய்வாய்ப்பட்டதால் மேலை நாடுகள் சீனத்திலிருந்து பால் பொருள்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தன.

 சீனா ஏற்றுமதிசெய்த பால் மற்றும் பால் உணவுகளில் "மேலமைன்' என்ற தொழிலியல் வேதி கலக்கப்பட்டிருந்தது. தீப்பிடிக்காத கூரை மற்றும் தடுப்புகளைத் தயாரிக்க உதவும் "மேலமைன் பார்மால்டிஹைடு' என்ற பிளாஸ்டிக் ரோசனத்தை உற்பத்தி செய்யத் தேவையான கச்சாப்பொருள் "மேலமைன்'. அதைப் பாலுடன் கலந்துவிட்டால் கூடுதலான புரதச்சத்து இருப்பதைப்போல முதல் கட்டச் சோதனைகளில் காட்டும். ஆனால், "மேலமைன்', சிறுநீரகத்திலும் சிறுநீர் உறுப்புகளிலும் சேதமேற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டதும் அதை உணவுப் பொருள்களில் சேர்ப்பது உலகளாவிய அளவில் தடை செய்யப்பட்டுவிட்டது.

 சீனாவின் பால் ஊழல், 2008 ஜூலையில் வெளிச்சத்துக்கு வந்தது. அடுத்த நவம்பருக்குள் மூன்று லட்சம் பேர் "மேலமைன்' ஏற்படுத்திய கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. சிறுநீரகத்தில் கல் உருவாவது முதலான பல்வேறு சிறுநீரகக் கோளாறுகள் காரணமாகக் குறைந்தது ஆறு குழந்தைகள் மரணமடைந்ததாகவும் தெரியவந்தது.

எப்படியாவது ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும் என்ற வெறியுடனிருக்கிற சீனத் தொழில்துறை தாம் பயன்படுத்துகிற வேதிப்பொருள்கள் உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடும் என்பன போன்ற "அல்ப விஷயங்களுக்காக' அலட்டிக் கொள்வதில்லை!

நம் நாட்டுப் பால் உற்பத்தியாளர்களில் சிலர் உரத்தைப் போட்டு, தீவனம் வளர்த்து,  அதைப் பசு மாட்டுக்கு ஊட்டி அதன் பிறகு பாலைக் கறந்து விற்பது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற விஷயம் என்று எண்ணியோ என்னவோ - நேரடியாக - யூரியா, உரம், காஸ்டிக் சோடா, சமையல் எண்ணெய், சலவை சோப்புத்தூள், தண்ணீர் ஆகியவற்றுடன் கொஞ்சம் பாலையும் கலந்து செயற்கைப் பாலை நேரடியாகவே தயாரித்து விட்டார்கள். அது பார்ப்பதற்கு இயற்கையான பாலைப் போலவே நிறமும், செறிவும், கொழுப்பு உள்ளடக்கமும் கொண்டிருக்கும்.

   "பால்செறிவு மானி'யும் எளிதில் ஏமாந்துவிடும். உணவு ஆய்வகங்களில் முதல் நிலைச் சோதனைகளிலும்கூட அந்தச் "செயற்கைப் பால்' தேறிவிடும். ஆனால், அதைத் தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்குப் பார்வைப்புலனும் செவிப்புலனும் பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புண்டு.

  சிறிதுகூட மனிதாபிமானமோ, பசு அபிமானமோ இல்லாமல் காசு மட்டுமே குறி  என்றிருக்கிற சில பால் உற்பத்தியாளர்களுக்கு "ஆக்சிடோசின்' என்ற வேதி கை கொடுக்கிறது. இயற்கையான ஆக்சிடோசின், விலங்குகளின் பிட்யூட்டரிச் சுரப்பியின் பின்பகுதியில் உற்பத்தியாகிச் சேமித்து வைக்கப்படுகிற ஒரு ஹார்மோன். அது பெண்களின் பிரசவத்திற்குப் பிறகு கருப்பையைச் சுருங்க வைப்பதற்கும் மார்பகத்திலிருந்து பாலை வெளிப்படச் செய்வதற்கும் உதவுகிறது. அந்த ஹார்மோன் செயற்கையாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது.

 பிரசவத்துக்குப் பின் கருப்பையில் சிக்கல் ஏற்பட்டால் அவசர கால சிகிச்சைக்கு மருத்துவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள். அதைக் கவனக் குறைவாகப் பயன்படுத்தினால் கருப்பை சேதப்பட்டுக் கிழிந்து கூடப் போகலாம்.

கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை ஆக்சிடோசின் மிகவும் மலிவாக, ஒரு குமிழ் ஐம்பது பைசா விலையில் கிடைக்கிறது. பால் கறப்பதற்குச் சற்று முன் அதைப் பால் மடியில் ஊசி மூலம் செலுத்திவிட்டால் கூடுதலாகப் பால் கிடைக்கும் என்ற தவறான எண்ணம் பால்காரர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆனால் உண்மையில் அது பால் காம்பிலுள்ள சுருக்குத் தசைகளைத் தளர்த்திவிட்டுப் பால் வேகமாக வெளிப்பட மட்டுமே செய்கிறது. அத்துடன் அது பசுவின் இனப்பெருக்க உறுப்புகளைச் சேதப்படுத்தவும் கூடும். பொன்  முட்டையிடும் வாத்தை அறுத்தவன் கதை மாதிரி, நிறையப் பால் கிடைப்பதைப் போலத் தோன்றினாலும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பசு பால் தருவது குறைந்து மலடாகவும் ஆகிவிடும். அதன் பிறகு அதைக் "கோ-சாலை'க்கோ (பசுப் பாதுகாப்பு இல்லம்), கசாப்புக் கடைக்கோ அனுப்ப வேண்டியதுதான்.

 "ஆக்சிடோசின்' செலுத்திக் கிடைத்த பாலைப் பருகும் மனிதர்களுக்கும் குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்கும் பலவிதமான உடலியல் கோளாறுகள் வரும். கருத்தரித்திருக்கும் தாய்மார்கள் அந்தப் பாலைப் பருகினால் பிரசவத்தின்போது கடுமையான உதிரப் போக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதில் தப்பிப் பிழைத்தாலும் குழந்தைக்குப் பாலூட்டுவதில் சிக்கல் ஏற்படலாம். பார்வைத் திறனும் கேட்கும் திறனும் பாதிக்கப்படுவதாயும் கண்டறியப்பட்டிருக்கிறது.

 மாடுகளுக்கு மட்டுமின்றிக் காய்கனி உற்பத்தியிலும் ஆக்சிடோசின் பயன்படுத்தப்படுகிறது. பறங்கி, பூசணி, சுரை போன்ற காய்களில் ஆக்சிடோசினை ஊசி மூலம் செலுத்தினால் அவற்றின் பருமன் ஓரிரு நாள்களிலேயே இருமடங்காக அதிகரித்து விடுகிறது.

 இவ்வாறு ஹார்மோன்கள் உணவுப் பொருள்களின் மூலம் உடலில் புகும்போது ஆண்மை மற்றும் பெண்மை பாதிக்கப்படும். சிறுமிகள் உரிய காலத்துக்கு முன்பே பருவமெய்தி விடும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

  பால்காரர்களை மட்டும் பழிப்பதில் அர்த்தமில்லை. எல்லாருமே பணம் சம்பாதிப்பதற்குப் பேயாக அலைகிறார்கள். ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்ந்த பின்னரும் அடுத்த ஆயிரம் கோடி ரூபாயைச் சேர்க்க ஆலாய்ப் பறந்து எந்தவிதமான ஊழலிலும் ஈடுபடத் தயங்காதவர்களிருக்கிற நம்நாட்டில் சாதாரண வியாபாரிக்கு அந்த நாட்டம் இல்லாமலா போகும்?

 சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு பிரபலமான நகைக் கடையில் ஒரு சவரன் தங்க நாணயத்தை வாங்கினேன். சில மாதங்கள் கழித்து நகை செய்வதற்காக அதை உருக்கியபோது அதிலிருந்து ஒரு வட்டமான செப்புத் தகடு பிரிந்து வந்தது. நகைக் கடை முதலாளியிடம் கேட்டபோது, ""நான் என்ன செய்ய முடியும்? நானே சவரன் காசை இன்னொருவரிடம் வாங்கித்தானே விற்கிறேன்'' என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

 இவ்வாறாக எல்லாப் பொருள்களின் விஷயத்திலுமே உற்பத்தியாளரிடமிருந்து புறப்பட்டுப் பல கைகள் மாறி நுகர்வோரைச் சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் கலப்படம் கூடிக் கொண்டே போகிறது.

 அரிசியில் கல், மிளகாய்ப் பொடியில் செங்கல் தூள், மிளகில் பப்பாளி விதை, தேயிலையில் உளுந்துத் தோலி, மஞ்சள் பொடியில் நிறமேற்றப்பட்ட சுண்ணாம்புத் தூள், சர்க்கரையில் ரவை என்று ஜோடி சேர்ப்பதில் "முதுநிலை முனைவர்' பட்டம் பெறும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

 அரிசியைப் போலவே, பருப்பைப் போலவே, உளுந்து பயிறைப் போலவே தோற்றமளிக்கும் கல் குருணைகளை உருவாக்கும் யந்திரங்களை வடிவமைத்து, அவற்றுக்கு அரசின் அனுமதியையும் பெற்று "தொழில்' செய்கிறார்கள்!

 இவ்வாறான கலப்படப் பொருள்களைச் சற்று பொறுக்கினால் பிரித்தெடுத்துவிட முடியும். ஆனால் பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் மூலமாகத் தானியங்களுக்குள் பரவிவிடும் வேதிகளை எப்படி நீக்க முடியும்?

  காய்-கனிகளுக்குக் கவர்ச்சி தரும் நிறங்களை ஏற்றவும், காய்கள் பழுக்காமலும் கனிகள் அழுகாமலும் தடுக்கவும் பயன்படும் வேதிகள், மரபியல் மாற்றம் செய்ய உதவும் வேதிகள் எனப் பல வேதிகளை நாம் உட்கொள்கிறோம். அதுமட்டுமின்றி உணவுப் பாக்கெட்டுகளில் அச்சிடப் பயன்படுத்தப்படும் சாய வேதிகளும் உணவில் கலந்து விடுகின்றன.

÷ஊறுகாய்களின் நிறத்தை மேம்படுத்தவும், டப்பியில் அடைக்கப்பட்டு வரும் காய்கறிகளின் பசுமை மாறாமல் தடுக்கவும் செப்பு வேதிகள் கலக்கப்படுகின்றன. தர்பூசணி, பட்டாணி, குட மிளகாய், கத்தரிக்காய் போன்றவை ஊசி மூலம் ஏற்றப்படும் வேதிகளால் மெருகேற்றப்படுகின்றன. ஆப்பிள் பழங்களுக்கு மெருகேற்றக் "காரீய ஆர்சனேட்' தெளிக்கப்படுகிறது.

 மஞ்சள் பொடி மற்றும் மசாலாத் தூள்களில் "காரீய குரோமேட்' கலக்கப்படுகிறது. இவ் வேதிகள் ரத்த சோகை, குறைப் பிரசவம், முடக்குவாதம் போன்ற கோளாறுகளை உண்டாக்க வல்லவை.

 இந்தியாவின் விவசாயிகள், ஐரோப்பிய விவசாயிகளைவிட 750 மடங்கு அதிகமான வேதி உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே மேலை நாடுகள் இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

 இந்தியத் தாய்மார்கள் தரும் தாய்ப் பாலில் குளோரின் மற்றும் பாஸ்பேட் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் தென்படுவதை ஓர் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. முலைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் முலைப் பாலில் மற்ற பெண்களின் முலைப் பாலில் உள்ளதைவிட அதிக அளவில் பூச்சிக் கொல்லிகளின் எச்சங்கள் காணப்படுவதும் கண்டறியப்பட்டது.

 பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெர்மானிய மருந்தாய்வு நிறுவனம் கத்தரிச் செடியின் வேர்களின் மருத்துவ குணங்களைச் சோதிக்க விரும்பி இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்தது. வழக்கப்படியே இந்திய ஏற்றுமதியாளர் கத்தரிச் செடி வேர்களுடன் கையிலகப்பட்ட காட்டுச் செடி வேர்களையும் கலப்படம் செய்து அனுப்பினார்.

      ஜெர்மானிய நிறுவனம் அவர் அனுப்பிய கலப்பட வேர்களில் புற்றுநோயைத் தடுக்கும் வேதிகள் இருப்பதைக் கண்டு, கத்தரிச் செடி வேர் வேண்டாம், கலப்பட வேர்களை மட்டும் நிறையத் திரட்டி அனுப்பும்படி கோரியது.

 இவ்வாறுதான் ரயில் பாதைகளில் கேட்பாரற்று மண்டிக் கிடந்த "நித்திய கல்யாணிச் செடி'யின் மகத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது.

  எனக்குத் தெரிந்தவரை கலப்படத்தால் ஏற்பட்ட ஒரே ஒரு நன்மை இதுதான்!